Monday, 12 December 2011


சுந்தர மஹால் 


கால்கள் தயங்கின வாசலைத்  தாண்ட

காலச் சுவடுகள் அதிகமில்லை,
சிறிதே கலைந்த ஓவியமாக,
அருமை வீடு அமர்ந்திருந்தது

நான்கு வாசல் திறந்த முற்றம்
ஓடி ஆடித் திரிந்த தோட்டம்
தளும்பி நின்ற கிணற்று நீர்
மாட்டுக் காடி ட்டுக் கூரை
புல் வெளிகளும் மொட்டை மாடியும்
வானுயர்ந்த வேப்ப மரங்களும் 
அப்படியே அப்படியே அப்படியே இருந்தன

சின்னண்ணா அறையும், பெரியண்ணா அறையும்
ஆனந்த விகடன் காலண்டர் பார்த்து
நான் வரையத்துவங்கிய என் குட்டி அறையும்
செல்லத் தம்பி தொட்டில் ஆட
மாம்மா படுக்கும் பலா அடைப்பும்

மாறா ஜன்னல் கம்பிகள் வழியே
சுவற்றின்  பின்னால் நிழலாடின
நல்ல வேளை உரியவர் இல்லை
என்ன இங்கே என்று கேட்க

ஐம்பது ஆண்டுகள் கழன்று சிதற
விதிர்த்து நின்றேன் கால்கள் பின்ன

கை மாறிய கணங்கள் மின்ன
இன்று இல்லாதவை இரண்டென உணர்ந்தேன்

அம்மாவின் கனிவும் அப்பாவின் அணைப்பும்
மறைந்த வாதா மரங்களாக

நினைவில் மட்டும்  . . . .
நிரந்தர வலியாய்

No comments:

Post a Comment